Monday, November 21, 2011

இந்திய துறைமுகங்களில் 2,87,000 கோடியில் வளர்ச்சித் திட்டப்பணிகள்: மத்திய கப்பல் துறை அமைச்சர் வாசன்

"2020"ல், இந்தியத் துறைமுகங்கள் 2,495 மில்லியன் டன் சரக்குகளை கையாள்வதற்காக, 2 ,87,000 கோடி ரூபாயில் வளர்ச்சித் திட்டப்பணிகள் நடந்து வருகின்றன'' என, மத்திய கப்பல் துறை அமைச்சர் வாசன் தெரிவித்தார். தூத்துக்குடி வ.உ.சி., துறைமுகத்தின் மிதவை ஆழம், பெரிய சரக்கு கப்பல்கள் வரும் வகையில், 538 கோடி ரூபாயில், 10.7 மீட்டரிலிருந்து 12.8 மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதை, நேற்று நாட்டிற்கு அர்ப்பணித்து, மத்திய கப்பல் துறை அமைச்சர் வாசன் பேசியதாவது: இங்கு, மிதவை ஆழம் அதிகப்படுத்தப்பட்டதன் மூலம், ஆறு தளங்களில், 80,000 டன் கொள்ளளவு கொண்ட பெரிய "பனாமாக்ஸ்' வகை கப்பல்களைக் கையாள முடியும். இதன் மூலம், துறைமுகத்தின் கொள்ளளவு, 7.5 மில்லியன் டன் அதிகரித்துள்ளது.
அகில இந்திய அளவில், பெரிய கப்பல்களை கையாள்வதற்கு ஏற்ற உள்கட்டமைப்பு வசதிகளைக் கொண்ட துறைமுகங்களில் ஒன்றாக, இது வளர்ச்சியடைந்திருக்கிறது. இங்கிருந்து சரக்கு கப்பல்களும், சரக்குப் பெட்டகக் கப்பல்களும், இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் தூர தேசங்களுக்கு நேரடியாகச் செல்ல முடியும்.

கடல்சார் வளர்ச்சியின் மூலம், ஒரு நாட்டின் வளர்ச்சியை முடுக்கிவிட முடியுமென்பதால், கடல்சார் துறையின் வளர்ச்சிக்கு, தற்போது அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. 2,87,000 கோடி ரூபாயில் திட்டம்: 2020ம் ஆண்டு, கிட்டத்தட்ட 2,495 மில்லியன் டன் சரக்குகளை கையாள்வதற்குத் தேவையான 3,288 மில்லியன் டன் கொள்ளளவை, இந்தியத் துறைமுகங்கள் அடைய, 2,87,000 கோடி ரூபாய் மதிப்பில் வளர்ச்சித் திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. இதேபோல், 4,350 கோடி ரூபாயில் அமையவுள்ள வெளித் துறைமுகம், 14 மீட்டர் மிதவை ஆழமாக இருக்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென நம்புகிறேன்.

தற்போது, தூர்வாரப்பட்டதன் மூலம், துறைமுகத்திற்கு, 103 ஏக்கர் நிலப்பரப்பு கிடைக்கப் பெற்றுள்ளது. இத்தகைய உள்துறைமுக திட்டப்பணிகள் முடிவுற்றால், துறைமுகத்தின் கொள்ளளவு, 61.78 மில்லியன் டன்னாக உயரும். நடப்பு நிதியாண்டின் கடந்த ஆறு மாதத்தில், இத்துறைமுகம், 13.7 சதவீதம் வளர்ச்சியடைந்து, எண்ணூர் துறைமுகத்திற்கு அடுத்தபடியாக, பெரிய துறைமுகங்களில் இரண்டாவது இடத்தை அடைந்துள்ளது. இத்துறைமுகத்தில், 130 தொழில்நுட்ப பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு, அமைச்சர் வாசன் பேசினார்.

No comments:

Post a Comment